/

முலாயம் சிங் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது: ஜபரியாப் ஜிலானி

சிறுபான்மை சமுதாயத்தை முலாயம் சிங் ஏமாற்றிவிட்டார் என்று மத்திய அமைச்சர் வேணி பிரசாத் கூறிய குற்றச்சாட்டு

Updated On :1 ஏப்ரல் 2013, 7:14 pm

சிறுபான்மை சமுதாயத்தை முலாயம் சிங் ஏமாற்றிவிட்டார் என்று மத்திய அமைச்சர் வேணி பிரசாத் கூறிய குற்றச்சாட்டு ஆதாரமில்லாதது என்று அகில இந்திய பாபர் மசூதி செயல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜபரியாப் ஜிலானி தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி விவகாரத்தில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு சிறுபான்மை சமுதாயத்தை சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஏமாற்றிவிட்டார் என்று மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா கடந்த சனிக்கிழமை குற்றம் சாட்டியிருந்தார்.

அமைச்சரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது மற்றும் தவறானது என்று ஜிலானி குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவர் என்றார்.

அக்டோபர் 29, 1990-க்கு முன்பும் அதற்குப் பிறகும் பாபர் மசூதியைக் காப்பதற்கான நடவடிக்கையை முலாயம் எடுத்தார். மாநில முதல்வர் என்ற வகையில் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் கண்காணித்ததோடு அப்பகுதியில் எந்தப் பணிகளும் நடைபெறாத வகையில் தடுத்து வந்தார் என்று ஜிலானி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர், கட்சித் தலைவர் முலாயம் சிங்கிடம், பாபர் மசூதியை ஹிந்துக்களிடம் கொடுத்துவிடலாம் என்று யோசனை தெரிவித்தபோது, பாபர் மசூதியைப் பாதுகாப்பது அரசியல் அமைப்பின்படி மிகவும் முக்கியமானது. முஸ்லிம்கள் மீதான அச்சுறுத்தல் முற்றிலும் விலகும் வரை அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று முலாயம் குறிப்பிட்டதை ஜிலானி சுட்டிக்காட்டியுள்ளார்.

1998ஆம் ஆண்டு பாஜக தலைவர் எல்.கே. அத்வானியுடன் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூட்டு சேர்ந்து கொண்டு 2003ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்தார்.

அப்போது அக்கட்சிக்கு 135 பேரவை உறுப்பினர்களே இருந்தனர் என்று வேணி பிரசாத் வர்மா குற்றம் சாட்டியிருந்தார். 1990ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி பகல் நேரத்தில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு கோஷங்களை எழுப்பியபடி அசோக் சிங்கால் சென்றது எப்படி என்றும், இரு இளைஞர்கள் பாபர் மசூதியின் மேற்கூரை பகுதி வரை சென்றது எப்படி என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதிலிருந்தே சிறுபான்மையின மக்களை முலாயம் வஞ்சித்து விட்டது தெளிவாகப் புரியும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஜிலானி அறிக்கையில் விரிவான விளக்கம் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.