/

ஆர்பிஐ, செபி அதிகாரிகள் எங்களை பழிவாங்குகின்றனர்: சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் குற்றச்சாட்டு

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) ஆகியவற்றைச் சேர்ந்த சில அதிகாரிகள் தங்களின் சொந்தப் பகை காரணமாக எங்களை பழிவாங்க முயற்சிக்கின்றனர் என்று சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 7:10 pm

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) ஆகியவற்றைச் சேர்ந்த சில அதிகாரிகள் தங்களின் சொந்தப் பகை காரணமாக எங்களை பழிவாங்க முயற்சிக்கின்றனர் என்று சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் குற்றம் சாட்டியுள்ளார்.

சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன், சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து சட்டவிரோதமாக ரூ. 24 ஆயிரம் கோடி திரட்டியதாக "செபி' குற்றம் சாட்டியிருந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தருமாறு சஹாரா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்நிறுவனம் பணத்தைத் திருப்பித் தராததால், சொத்துகளை முடக்க நீதிமன்றம் "செபி'க்கு அறிவுறுத்தியது.

அதன்படி, சொத்துகளை முடக்கிய செபி, சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராயிடம் புதன்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது, அவரது சொத்துகள் குறித்தும், நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துகள் குறித்தும் "செபி' அதிகாரிகள் கேள்வி கேட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரதா ராய், பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பியளித்து விட்டதாகவும், இன்னும் தரவேண்டிய தொகையை "செபி'யிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அவர்கள்தான் அத்தொகையை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், பி.டி.ஐ. செய்தியாளரிடம் சுப்ரதா ராய் வியாழக்கிழமை கூறியதாவது:""கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து எங்கள் குழுமத்துக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் தொடங்கியது. பின்னர், 2008-ல் "ஆர்பிஐ' எங்கள் மீது நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து இப்போது "செபி' நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இதை எதிர்த்து இறுதிவரை போராடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.

எங்கள் குழுமத்தின் மீது "ஆர்பிஐ' மற்றும் "செபி'யை சேர்ந்த குறிப்பிட்ட சில அதிகாரிகள் தங்களின் சொந்தப் பகையை மனதில் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்களின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு நாங்கள் பலிகடாவாகியுள்ளோம். கடந்த 2 ஆண்டுகளாக இப்பிரச்னையை சமாளிப்பதற்கே எனது 60 சதவீத நேரத்தை செலவிட்டு வருகிறேன்.

ஆனால், இப்போது எங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கைக்கும், 2005-ல் எங்களுக்கு எதிராக இருந்த அரசியல் சூழ்நிலைக்கும் தொடர்பில்லை என்றே கருதுகிறேன்'' என்றார்.

பணக்கார அரசியல்வாதிகள், தாங்கள் சட்டவிரோதமான வழிகளில் ஈட்டிய பணத்தை முதலீடு செய்ய சஹாரா குழுமத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, ""அதில் சிறிதளவும் உண்மையில்லை. உண்மையை யாராலும் மறைக்க முடியாது'' என்றார் சுப்ரதா ராய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.