வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மேற்கு வங்கத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல்

மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அரசியல் பரபரப்புக்கு இடையில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :11 ஜூலை 2013, 7:53 pm

மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அரசியல் பரபரப்புக்கு இடையில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

மேங்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசுக்கும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 11, 15, 19, 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு கடந்த மாதம் 28ஆம் தேதி தீர்ப்பளித்தது.

ரம்ஜான் பண்டிகை காரணமாக தேர்தல் தேதியை மாற்றியமமைக்குமாறு மாநில அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. தேர்தலை நடத்துவதில் தாமதத்தை ஏற்படுத்த முயல்வதாக விமர்சித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் தேதிகளை மாற்றியமைக்க முடியாது என்று கடந்த 2ஆம் தேதி திட்டவட்டமாகத் தெரிவித்தது. ஏற்கெனவே உத்தரவிட்டபடி ஐந்து கட்டமாக தேர்தலை நடத்துமாறும் அறிவுறுத்தியது. அதன்படி, முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பாங்குரா, மேற்கு மிதுனபுரி, புருலியா மாவட்டங்களில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இந்த மாவட்டங்களில் தேர்தல் நடக்கும் மொத்தமுள்ள 58,865 இடங்களில் 6274 இடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மாநிலத்தின் 17 மாவட்டங்களில் மொத்தம் 1.7 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இப்போது மாவட்ட பஞ்சாயத்துகளில் பெரும்பாலாவை இடதுசாரி முன்னணியின் வசம் உள்ளன. இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸýக்கும் காங்கிரஸýக்கும் இடையில் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. எனினும், சட்டப்பேரவைத் தேர்தலில் தாங்கள் பெற்ற வெற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

சாரதா நிதி நிறுவன மோசடி, காம்துனி பாலியல் மற்றும் கொலை வழக்கு உள்ளிட்ட விவகாரங்களால் ஆளுங்கட்சியின் நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கருதுகின்றன.

ஆளுங்கட்சி மீது புகார்: இதனிடையே, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை மிரட்டுவதாகவும் இதன் காரணமாக சுமார் 6000 இடங்களில் தங்கள் கட்சியினரால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் இடதுசாரி முன்னணியின் தலைவர் பிமன் போஸ் குற்றம் சாட்டினார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவரான சுதீப் பந்தோபாத்யாயா மறுத்துள்ளார். தாங்கள் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் பயப்படுவதாக அவர் கிண்டலடித்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது தாக்குதல்: இந்நிலையில், ஹெளரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வன்முறை வெடித்தது.

அங்கு வீடுகளுக்கும் நெல் வயல்களுக்கும் ஒரு கும்பல் தீவைத்தது. இதையடுத்து அந்த கிராமத்தை நேரில் பார்வையிடச் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசித் மிஸ்ரா மீது திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த அசித் மிஸ்ரா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திரிணமூல் தொண்டர்கள் கைது: பர்த்வான் மாவட்டத்தில் உள்ள பொல்கோனா கிராமத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் பயங்கர ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கிராமத்துக்குச் சென்ற போலீஸார் அந்த 2 தொண்டர்களையும் கைது செய்தனர். அவர்களது வீடுகளில் இருந்து ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.