ஹெலிகாப்டர் ஒப்பந்த பேரம் தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை பாதுகாப்புத் துறை அமைச்சகம் சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது.
முக்கியப் பிரமுகர்களுக்கான 12 சொகுசு ஹெலிகாப்டர் வாங்குவதற்காக, இத்தாலி-பிரிட்டன் நிறுவனமான அகஸ்டா வெஸ்லேண்டுடன் ரூ.3,600 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்திய அரசிடமிருந்து இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக ரூ.360 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் அதன் தாய் நிறுவனமான இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கனிக்காவின் முன்னாள் தலைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக இத்தாலியில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. லஞ்சம் பெற்றது யார் என்பதைக் கண்டறிய இந்தியாவிலும் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்திய விமானப்படை தலைமை தளபதி எஸ்.பி. தியாகிமற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் திரட்டுவதற்காக, இத்தாலியின் மிலன் நகர நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்புத் துறை தலைமை இயக்குநர் தலைமையிலான உயர்நிலைக் குழு சென்றிருந்தது. ஒப்பந்த விதிகள் மீறப்பட்டுள்ளதா என்று ஆராய்வதற்காக, இத்தாலி நீதிமன்றத்திலிருந்து திரட்டப்பட்ட ஆவணங்களை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









