மத்திய அரசின் அமைப்பான, மக்கள் செயல்பாடு மற்றும் ஊரக தொழில் நுட்ப அபிவிருத்தி கவுன்சில் (காபார்ட்) ஊழல் புகாரில் சிக்கியதையடுத்து, அதுபற்றி விசாரிக்க தனியார் சமூக நிறுவனத்தின் உதவியை மத்திய அரசு நாடி உள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, நாடு முழுவதும் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட 1986ஆம் ஆண்டு முதல் இதுவரை 12,000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
நிதியுதவி பெற்ற பல நிறுவனங்கள் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதும், மேலும் பல நிறுவனங்கள் போலியானவை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்படி மோசடி செய்த சுமார் 800 நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நாடு முழுவதும் 70 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து முழுமையாக ஆராய்வதற்கு தனியார் சமூக அமைப்பான டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் (டிஐஎஸ்எஸ்) உதவியை மத்திய அரசு நாடி உள்ளது. வரும் 8ஆம் தேதி காபார்ட் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்களில், அதிகபட்சமாக 212 ஆந்திரத்தில் உள்ளன. ஆனால் எவ்வளவு நிதியை முறைகேடு செய்துள்ளன என்ற விவரம் இல்லை.
இதுபோல தமிழகத்தைச் சேர்ந்த 85 தொண்டு நிறுவனங்களும், கர்நாடகத்தைச் சேர்ந்த 84நிறுவனங்களும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 62 நிறுவனங்களும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பிகாரைச் சேர்ந்த 35 தொண்டு நிறுவனங்கள், நிதியைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகி உள்ளன. அந்த நிறுவனங்களின் முகவரி போலி என தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக 97 அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊழல் புகார் காரணமாக காபார்ட் அமைப்பு 9 மண்டல அலுவலகங்களை சமீபத்தில் மூடியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.