15ஆவது பிரதமர் - 15 தகவல்கள்

நாட்டின் 15ஆவது பிரதமராக நரேந்திர மோடி வரும் 26ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார்.
15ஆவது பிரதமர் - 15 தகவல்கள்
Updated on
4 min read

நாட்டின் 15ஆவது பிரதமராக நரேந்திர மோடி வரும் 26ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு,கடுமையான பிரசாரம் செய்ததன் மூலம் சிறந்த அரசியல்வாதியாகத் தென்பட்ட மோடி,தேர்தல் முடிந்து பிரதமர் நியமனக் கடிதத்தைப் பெற்ற கையோடு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பேசிய உரையின் மூலம் தலைசிறந்த அரசியல் நிபுணராகவும் அறியப்பட்டார்.

தேநீர் விற்கும் சிறுவனாக வாழ்க்கையைத் தொடங்கி தேசப் பிரதமராக உயர்ந்திருக்கும் நரேந்திர மோடி குறித்து, பலரும் அறியாத பல தகவல்கள் உள்ளன. அந்த வகையில் 15ஆவது பிரதமர் மோடி குறித்த 15 முக்கியத் தகவல்கள் இதோ:

1. கவிஞர்-எழுத்தாளர்: பாஜகவைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயைப் போலவே நரேந்திர மோடியும் ஒரு கவிஞர், எழுத்தாளரும்கூட. ஆனால், அவரது கவிதைகள் குஜராத்தி மொழியிலேயே இருப்பதால் வாஜ்பாயைப்போல பெரிய அளவில் பிரபலமாகவில்லை. "பிரேம் தீர்த்' (அன்பின் ஆலயம்) என்பது மோடியின் கவிதை நூல்களில் ஒன்று. ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் மறைந்த குருஜி கோல்வல்கர் உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் மோடி எழுதியுள்ளார். சட்டமேதை அம்பேத்கர் குறித்து "சாமாஜிக் சம்ரஸ்தா' என்ற நூலை எழுதியுள்ளார். மேலும், நெருக்கடி நிலையை எதிர்த்து மோடி எழுதிய "சங்கர்ஷ்மா குஜராத்' என்ற நூலும் பிரபலமானது. தற்காலத்தில் "டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளப் பதிவுகளிலும் மோடியே முன்னிலையில் உள்ளார்.

மோடியின் கவிதை வரி: "என் தேசத்தின் மண் எனக்கு நறுமணம், என் தேசம் மண்ணாக நான் விடமாட்டேன்'.

2. ஒழுக்கம் மிகுந்தவர்: மோடி பாரம்பரியத்தை மிகவும் மதிப்பவர். ஆகையால் புகைபிடித்தல், குடித்தல் உள்ளிட்ட எந்தத் தீய பழக்கங்களையும் தீண்டாதவர். தீவிரமான சைவ உணவுப் பழக்கம் உள்ளவர் (வெஜிடேரியன்). எளிமையான வாழ்க்கை முறையைக் கையாளும் மோடி யோகாசனங்கள் செய்வதில் நாட்டம் கொண்டவர்.

3. சுவாமிஜியே முன்மாதிரி: நரேந்திர மோடிக்குத் தூண்டுகோலாக அமைந்தவை, நரேந்திரர் என்ற இயற்பெயர் கொண்ட சுவாமி விவேகானந்தரின் வாழ்வும், போதனைகளுமே. 2012-ஆம் ஆண்டில், விவேகானந்தர் இளைஞர் மேம்பாட்டு யாத்திரை (விவேகானந்த் யுவ விகாஸ் யாத்ரா) என்ற ஒரு மாத கால யாத்திரையின் மூலம் தமது சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

4. சாமியாராக விரும்பியவர்: குழந்தைப் பருவம் முதலே சாமியாராக வேண்டும் என்று விரும்பியவர். பல்வேறு சம்பிரதாயங்களைச் சேர்ந்த சாதுக்கள், துறவிகளுடன் நெருங்கிப் பழகியவர். இதனால், பள்ளிப்படிப்பு முடிந்ததுமே சாமியாராகிவிடும் நோக்கத்தில், கையில் பணமின்றி ஒரு ஜோடி உடையுடன் மட்டுமே நாடு முழுவதும் சுற்றியவர். அப்போது, மேற்கு வங்க மாநிலம் பேலூரில் உள்ள ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சில மாதங்களும், கடைசியாக இமயமலை சென்று அங்குள்ள துறவிகளுடன் சில மாதங்களும் கழித்துவிட்டு, 2 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் வீடு திரும்பியவர்.

5. தாய்ப்பாசம் மிகுந்தவர்: மோடி தாய் மீது மிகவும் பாசம் கொண்டவர். எந்த ஒரு புதிய செயலைத் தொடங்கினாலும் தனது தாயார் ஹீராபென்னின் ஆசியைப் பெற்றுத்தான் தொடங்குவார். அண்மையில் மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தாயாரைச் சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

6. ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்: இமயமலையில் சில காலம் சுற்றிவிட்டுத் திரும்பிய பிறகு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர ஊழியராக (பிரசாரகர்) ஆனார். அப்போது அவருக்கு வயது 20. இந்த அமைப்பின் மூலம் புயல் மற்றும் பூகம்பம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் நேரடியாக மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதோடு, நிதி திரட்டியும் உதவினார். இந்திரா காந்தியின் ஆட்சியில் நெருக்கடி நிலை காலகட்டத்தில் (1975-77), ஜெயபிரகாஷ் நாராயண் (ஜே.பி.) தலைமையில் நடைபெற்ற ஜனநாயக மீட்புப் போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது, தலைமறைவாக பல்வேறு மாறுவேடங்களில் சுற்றிய மோடி, மற்றொரு ஜனநாயகப் போராளி ஜார்ஜ் பெர்னாண்டஸ் குஜராத்தில் தலைமறைவாகச் செயல்படுவதற்கும் உதவினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் படிப்படியாக பல பொறுப்புகளை வகித்த மோடி, பிறகு ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடைய அரசியல் கட்சியான பாஜகவில் சேர்ந்தார்.

7. தேநீர் விற்றவர்: ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் ஆவதற்கு முன்பு சிறிது காலம் தனது உறவினர் நடத்திய தேநீர் விற்பனைக் கடையில் மோடி பணியாற்றினார். பின்னர், குஜராத் மாநில சாலைப் போக்குவரத்துக் கழக கேன்டீனிலும் சிறிது காலம் பணியாற்றினார். தனது முந்தைய எளிய வாழ்க்கையை தேர்தல் பிரசாரத்தில் மோடி குறிப்பிட்டதை அடுத்து, அவர் பிரதமர் ஆக முடியாது வேண்டுமானால் தேநீர் கடை வைக்கலாம் என்று மணிசங்கர் அய்யரின் கிண்டலுக்கு ஆளானார். அந்தக் கிண்டலையே "தேநீருடன் விவாதம்' என்னும் தேர்தல் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்தினார் மோடி.

8. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: நரேந்திர மோடி, மோட் காஞ்சீ (எண்ணெய் செக்கு ஆட்டுபவர்) எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். தனது ஜாதி குறித்து உத்தரப் பிரதேச மாநிலம் தோமரியாகஞ்ச் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்தான் மோடி முதன்முறையாக வெளிப்படையாகத் தெரிவித்தார். மோடியின் பேச்சு குறித்து "தாழ்ந்த அரசியல்' என்று பிரியங்கா கூறியதற்கு பதிலாக,"மோட் காஞ்சீ என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்தான் நான். அந்த ஜாதியில் பிறந்தது என்ன குற்றமா? அதற்காக தாழ்ந்த அரசியல் என்று கூறுவதா?' என்று மோடி கேள்வி எழுப்பினார்.

9. குழந்தைத் திருமணம்: இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தபோதுதான், தான் திருமணமானவர் என்ற தகவலை மோடி வெளியிட்டார். வேட்புமனுவில், தனது மனைவியின் பெயர் யசோதா பென் என்றும்,அவர் தனித்து வாழ்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். யசோதா பென்னுடன் நரேந்திர மோடிக்கு நடந்தது குழந்தைத் திருமணம் என்றும், குடும்ப பாரம்பரிய வழக்கத்துக்காக மோடியை நிர்பந்தப்படுத்தி இந்தத் திருமணம் நடைபெற்றதாகவும் அவரது சகோதரர் சோம்பாய் பின்னர் விளக்கம் அளித்தார்.

10. முப்பது ஆண்டு தனிமை: நரேந்திர மோடி தனக்குத் திருமணம் நடந்ததற்கு மறுநாள் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். 2 ஆண்டு காலம் சாமியார்களோடு தொடர்பு, பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர பிரசாரகர், பாஜக கட்சிப் பணி என சமூக, அரசியல் பணிகளில் ஈடுபட்ட அவர் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகே தனது குடும்பத்தாருடன் மீண்டும் இணைந்தார்.

11. எம்.ஏ. பட்டதாரி: ஏற்கெனவே பள்ளிப்படிப்பை முடித்திருந்த மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரசாரகராகச் செயலாற்றியபோது தில்லி பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.ஏ. அரசியல் விஞ்ஞானப் பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து குஜராத் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்வி மூலம் எம்.ஏ. அரசியல் விஞ்ஞானப் பட்டமும் பெற்றார். படிப்பு தடைபட்ட போதிலும் தளராது படித்து முதுகலை முடித்த மோடிக்கு கல்வி வளர்ச்சியில் மிகுந்த நாட்டம் உண்டு. குஜராத் மாநிலத்தில் பெண்கள் - குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் - பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுவதைத் தடுத்து, தொடர்ந்து கல்வி பெறுவற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

12. "இமேஜ்' மேனேஜர்: மோடி என்றால் வளர்ச்சி என்ற வகையில் தனது இமேஜை வளர்த்துக்கொண்டுள்ள மோடி, அடிப்படையில் ஓர் இமேஜ் மேனேஜரும்கூட. "மக்கள் தொடர்பு மற்றும் இமேஜ் நிர்வாகம்' குறித்த மூன்று மாத காலப் படிப்பை அமெரிக்காவில் பயின்றவர் மோடி.

13. அலங்காரப் பிரியர்: பொது மக்கள் மத்தியில் தனது தோற்றம் எடுப்பாக இருக்க வேண்டும் என்பதில் மோடி தனிக் கவனம் செலுத்துவார். நன்றாக வாரிய தலை, அளவாகக் கத்திரிக்கப்பட்ட தாடியுடன் எப்போதும் காணப்படும் மோடி, விதவிதமான வண்ண உடைகளை அணிவதிலும் சமர்த்தர். அரைக்கை கதர்ச் சட்டை, குர்தா - பைஜாமா, "நேரு" கோட்டு என பல்வேறு உடைகளை, பொதுவாக அடர்த்தியான நிறமுள்ள ஆடைகளை அணிவார். ஆமதாபாதில் உள்ள அதிகச் செலவு பிடிக்கும் "ஜேட் ப்ளூ' ஆடை வடிவமைப்பு நிறுவனம் தான் மோடிக்கு பெரும்பாலும் உடைகளைத் தேர்வு செய்கிறது. மோடியின் தோரணையும், நேர்த்தியான ஆடை அணியும் திறனும் அவரை "கவர்ச்சிமிகு' அரசியல் தலைவராக வலம் வரச் செய்துள்ளது.

14. நம்பகமான நால்வர் குழு: கடமையில் கறாரான மோடி, குஜராத் முதலமைச்சர் என்ற முறையில் தனது சிறப்பான செயல்பாட்டுக்கு "நால்வர் அணி' ஒன்றை நம்பகமாக வைத்திருந்தார். குஜராத் மாநில அரசின் முதன்மை தலைமைச் செயலர் குன்னியில் கைலாஸநாதன், ஜி.சி. முர்மு, ஏ.கே. சர்மா மற்றும் விஜய் நெஹ்ரா ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே அந்த நால்வர். இதில், கைலாஸநாதன் மற்றும் ஜி.சி. முர்மு ஆகிய இருவரை, மோடி பிரதமரானதும், மத்திய அரசில் தனக்கு உதவிகரமாக இருப்பதற்காக அழைத்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

15. வளர்ச்சி நாயகர்: குஜராத் கலவரத்தால் எழுந்த அவப்பெயரையும் தாண்டி மோடியின் தலைமையின்கீழ் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருப்பதற்கு, அவரது வளர்ச்சிப் பணிகளே பெரிதும் காரணம். வளர்ச்சிப் பணிகளுக்கு பாரதீய கிஸான் சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகிய சங் பரிவார் அமைப்புகள் குறுக்கே நின்றபோது கவலைப்படாமல் அவற்றைப் புறந்தள்ளியவர் மோடி. உதாரணத்துக்கு, ஆமதாபாதில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக சாலையோரத்தில் இருந்த சுமார் 200 கோவில்களை, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அகற்றியதைக் குறிப்பிடலாம்.

குஜராத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மதகு அணைகளைக் கட்டியது, சர்தார் சரோவர் அணைத் திட்டம், கிராமப்புறங்களுக்கு மின்வசதி வழங்கும் "ஜோதி கிராம்' திட்டம், குடிநீர் விநியோகத்துக்கான "சுஜலாம் சுஃபலாம்' திட்டம், குழந்தைகள் இறப்பைத் தடுக்க "சிரஞ்சீவி யோஜனா', பெண் சிசுக் கொலையைத் தடுக்க "பேட்டி பசாவ்' திட்டம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியவர் மோடி. 2007-இல் இந்தியா டுடே பத்திரிகை அளித்த சிறந்த முதலமைச்சருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளையும் மோடி பெற்றுள்ளார். 2012-இல் பிரபல சர்வதேச "டைம்' இதழின் முன்பக்கத்தை மோடி அலங்கரித்தது, இந்திய அளவில் ஒருசில அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள அங்கீகாரமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com