கிராமங்களில் வசிக்கும் 3.6 கோடி பேருக்கு சுகாதாரமான குடிநீர் இல்லை: மத்திய அரசு

இந்தியா முழுவதும் உள்ள 63,000 கிராமங்களில் வசிக்கும் 3.6 கோடிக்கும் அதிகமானோருக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
கிராமங்களில் வசிக்கும் 3.6 கோடி பேருக்கு சுகாதாரமான குடிநீர் இல்லை: மத்திய அரசு
Updated on
1 min read

இந்தியா முழுவதும் உள்ள 63,000 கிராமங்களில் வசிக்கும் 3.6 கோடிக்கும் அதிகமானோருக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

அதிகமான ஆர்சனிக், ஃப்ளோரைடு, இரும்பு, உப்புத்தன்மை அல்லது நைட்ரேட் ஆகிய காரணங்களால் குடிநீர் சுகாதாரமற்று இருப்பதாக, மத்திய இணை அமைச்சர் (குடிநீர் துறை) ராம் கிர்பால் யாதவ் கூறினார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் தாக்கல் செய்த பதில் மனுவில், ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் வழங்கியுள்ள தரவுகளின்படி நாடு முழுவதும் உள்ள 63,378 கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் இல்லை என்றார்.

அவரது பதில் விவரம்:

நாடு முழுவதும் உள்ள 1,318 கிராமங்களில் கிடைக்கும் குடிநீரில் அளவுக்கு அதிகமாக ஆர்சனிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதவரை சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை. குடிநீரில் லிட்டருக்கு 0.05 மில்லிகிராம் வரை மட்டுமே ஆர்சனிக் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நீரை தொடர்ந்து பருகும் கிராமத்தினருக்கு பலவிதமான தோல் நோய்கள் உண்டாகின்றன. இதனால் குழந்தைகளின் தோல் நிறம் மாறுவதோடு, தடிமனாகவும் மாறி விடுகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் புற்றுநோய் வரை சென்றுவிடுகிறது.

எனவே, அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலமாக குடிநீரை வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதுவரை கிராமங்களில் சமுதாய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நபர் ஒன்றுக்கு 8 முதல் 10 லிட்டர் வரை சுகாதாரமான குடிநீர் கிடைக்கும்.

சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை என்ற புகார் இருந்த போதும், நாட்டில் குடிநீர் வசதி இல்லாமல் எந்த கிராமும் இல்லை.

நாட்டில் உள்ள 63,000 கிராமங்களுக்கு சுகாதாராமன குடிநீர் கிடைக்கவில்லை. அங்குள்ள குடிநீர் ஆதாரங்கள் ஆர்சனிக், ஃப்ளோரைடு, இரும்பு, உப்புத்தன்மை அல்லது நைட்ரேட் ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில் கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்காக மத்திய அரசு சார்பில் 2758.45 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் சுகாதாரமான குடிநீரை குழாய் மூலம் வழங்குவதற்கு அரசு சிறப்பு திட்டத்தை தயாரித்து வருகிறது என்றார் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com