புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

அஸ்ஸாம் 2-ஆம் கட்டத் தேர்தலில் 82% வாக்குப் பதிவு: வன்முறையில் முதியவர் பலி

அஸ்ஸாமில் இன்று நடைபெற்ற இரண்டாவது, இறுதிக் கட்ட தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 82.21 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்குப்பதிவின் போது சிஆர்பிஎஃப் வீரர்களுடன் ஏற்பட்ட கைகலப்பில், முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2016, 2:50 pm

குவாஹாட்டி: அஸ்ஸாமில் இன்று நடைபெற்ற இரண்டாவது, இறுதிக் கட்ட தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 82.21 சதவீத வாக்குகள் பதிவாயின.

வாக்குப்பதிவின் போது சிஆர்பிஎஃப் வீரர்களுடன் ஏற்பட்ட கைகலப்பில், முதியவர் ஒருவர் உயிரிழந்தார். சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

அஸ்ஸாம் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில், 65 தொகுதிகளுக்கு கடந்த 4-ஆம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெற்றது. எஞ்சியுள்ள 61 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

பார்பிட்டா மாவட்டம் சோர்போங் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்களை வரிசைப்படுத்த முயன்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) போலீஸ், ஒருவருக்கும், வாக்காளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கு வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 81 வயது முதியவர் உயிரிழந்தார்.

சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர், காவலர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நிலைமை கட்டுக்குள் வந்ததை அடுத்து வாக்குப் பதிவு தொடர்ந்தது.

காமரூப் மாவட்டத்தில் வாக்களிக்க வந்த கர்ப்பிணி பெண் ஒருவர், தனது குழந்தையை அழைத்து வருவதற்காக மீண்டும் வாக்குசாவடிக்குள் செல்ல முயன்றார். அப்போது பணியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர் அவரைத் தடுத்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்களுக்கும், சிஆர்பிஎஃப் வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இறுதியில், வாக்களிக்க வந்தவர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது, சிஆர்பிஎஃப் படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தைக் கலைக்க சிஆர்பிஎஃப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இறுதியில், அங்கிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் அனைவரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். வேறு சிஆர்பிஎஃப் குழுவினர் அங்கு பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றனர்.

அஸ்ஸாமில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலையில் இருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திஸ்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

Story image

வாக்குப்பதிவின் போது ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. எனினும் அவை உடனடியாக சரி செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக இரண்டாம் கட்டத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 82.21 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 78.06 சதவீத வாக்குகள் பதிவாகின.

பதக்கம் வென்றவர்கள்

Story image

இந்த தேர்தலின்போது, முதலில் வாக்களிக்கும் 5 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, தேர்தல் ஆணையம் வழங்கும் பதக்கங்களைப் பெறுவதற்காக ஏராளமான இளைஞர்கள் அதிகாலை 4 மணியிலிருந்து வாக்குச்சாவடியில் காத்திருத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.