புது தில்லி : மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நடிகரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மிதுன் சக்ரவர்த்தி தொடர்ந்து விடுப்பில் இருப்பது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இன்று காலை மாநிலங்களவை கூடியதும், தனது உடல்நிலை காரணமாக தனக்கு மாநிலங்களவை நடவடிக்கையில் பங்கேற்பதில் விடுப்பு அளிக்குமாறு மிதுன் சக்ரவர்த்தி அனுப்பிய கடிதத்தை, அவைத் துணைத் தலைவர் குரியன் வாசித்தார்.
இதையடுத்து, சமாஜ்வாதித் தலைவர் நரேஷ் அகர்வால், மிதுன் சக்ரவார்த்தியின் நடவடிக்கையை கண்டித்ததோடு, ஒருவர் இவ்வாறு தொடர்ந்து விடுப்பில் இருப்பது சரியல்ல என்று கூறினார்.
மேலும், ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றம் கூடும்போது, தவறாமல் மிதுன் சக்ரவர்த்தி, இதுபோல கடிதத்தை அனுப்பிவிடுகிறார். உண்மையிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் விடுப்பு எடுக்கலாம். ஆனால், ஒருவர் அவைக்கு வராமல், எம்.பிக்கான சலுகைகளைப்பெறுவது சரியல்ல என்று கூறினார்.
இதற்கிடையே, நாடாளுமன்ற புள்ளிவிவரத்தின் அடிப்படையில், மிதுன் சக்ரவர்த்திக்கு வெறும் 10 சதவீத வருகைப் பதிவு இருப்பதும், இதுவரை அவர் ஒரு விவாதத்திலும் பங்கேற்காததும், ஒருகேள்வியைக் கூட எழுப்பாததும், அவரது சார்பில் ஒரு மசோதா கூட நிறைவேற்றப்படாததும் தெரிய வந்துள்ளது.
இவரை விட, நடிகை ரேகாவுக்கு வெறும் 5 சதவீதமும், சச்சினுக்கு 7 சதவீதமும்தான் வருகைப் பதிவு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.