புதுதில்லி: பட்டம் விடுவதற்கு பயன்படுத்தப்படும் கண்ணாடித்தூள் தடவப்பட்ட "மாஞ்சா' என்னும் நூல் வகைக்கு நாடு தழுவிய அளவில் இடைக்காலத் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கண்ணாடித்தூள் மற்றும் ஆபத்தான ரசாயனங்கள் தடவிய நூல் வகைகள் பட்டம் விடுவதற்கு பயன்படுத்தபடுவதால் பறவைகள் ஆபத்திற்கு உள்ளாவதாக கூறி அதற்கு தடை விதிக்கக் கூறி, 'பீப்புள் பார் எத்தினிக்கல் ட்ரீட்மெண்ட் ஆப் அனிமல்ஸ் - இந்தியா' என்ற அமைப்பு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஸ்வதந்தீர் குமார், 'கண்ணாடித்தூள் தடவப்பட்ட 'மாஞ்சா' உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கும் மற்ற நூல் வகைகளுக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இத்தகைய நூல் வகைகளை வாங்குவது, விற்பது மற்றும் பயன்படுத்துவது ஆகிய அனைத்தும் சட்டப்படி குற்றமாகும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
மேலும் 'சைனீஸ் மாஞ்சா' என்று அழைக்கப்படும் நைலான் நூல், கண்ணாடித்தூள் தடவப்பட்ட சிந்தடிக் மற்றும் காட்டன் பிரிவு நூல் வகைகளுக்கும் இந்த தடை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்காலத் தடையானது அடுத்த விசாரணை நடைபெறும் 01.02.2017 வரை நீடிக்கும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.