சியாச்சின் பனிச் சரிவு: 10 வீரர்களும் இறந்திருக்கலாம்?

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் மலைப் பகுதியில் ரோந்து சென்றபோது பனிச் சரிவில் சிக்கிய 10 வீரர்களும் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என ராணுவம் கூறியுள்ளது.
சியாச்சின் பனிச் சரிவு: 10 வீரர்களும் இறந்திருக்கலாம்?
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் மலைப் பகுதியில் ரோந்து சென்றபோது பனிச் சரிவில் சிக்கிய 10 வீரர்களும் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என ராணுவம் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், இமயமலைத் தொடரில் 19,600 அடி உயரத்தில் சியாச்சின் ராணுவ நிலை அமைந்துள்ளது. இது உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள ராணுவ நிலையாகும். இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரிஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ஒர் அதிகாரியும் ஒன்பது வீரர்களும் நேற்று காலை சியாச்சின் பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது, திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.

இரண்டாவது நாளாக இன்றும் பனியில் புதையுண்ட வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பகல் நேரத்தில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸும், இரவில் மைனஸ் 42 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை நிலவுகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணுவத்தினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், மாலை வரை எவ்வித முன்னேற்றமுமில்லை.

இதனிடையே ராணுவ வீரர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உதவியை மறுத்த இந்தியா

இந்திய ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கிய 30 மணி நேரத்துக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ அதிகாரி அமிர் ரியாஸ் இந்திய அதிகாரி ரன்பீர் சிங்கை தொடர்பு கொண்டு மீட்புப் பணியில் உதவுவதாக கூறினார்.

எனினும், பாகிஸ்தான் உதவியை ஏற்றுக் கொள்ள இந்தியா மறுத்துவிட்டது. ஏற்கெனவே தேவையான உபகரணங்களுடன் ராணுவ வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா பாகிஸ்தானிடம் கூறிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com