

இணைய சமநிலை தொடர்பாக இந்திய அரசு எடுத்த முடிவு குறித்து சக ஊழியரின் மோசமான கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்.
இந்தியாவில் சில குறிப்பிட்ட இணையதளங்களை இலவசமாக வழங்கும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஃபேஸ்புக் நிறுவனம் ஃப்ரீ பேசிஸ் என்ற சேவையை தொடங்குவதாக அறிவித்தது.
இந்நிலையில் இணைய சமநிலை குறித்து இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று முறை ஆணையம் கருத்து கேட்பு நடத்தியது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் இணைய சமநிலை நிலவும் வகையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் இலவச இணைய சேவைக்கு தடை விதித்தது.
இதுகுறித்து நேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்த ஃபேஸ்புக் நிறுவனத்தின் 'போர்டு' உறுப்பினர் மார்க் ஆண்ட்ரீசன், காலனி எதிர்ப்பின் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பத்தாண்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது என கூறியிருந்தார்.
இதுகுறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் தனது கருத்தை நீக்கிவிட்டு, தனக்கு தரப்பட்ட தவறான தகவல்கள் மூலமாகவே இந்திய பொருளாதாரம் குறித்தும், இந்திய அரசியல் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தேன். காலனி ஆதிக்கத்தை 100 சதவீதம் எதிர்க்கிறேன். சுதந்திரத்துக்காக 100 சதம் ஆதரவு அளிக்கிறேன் என குறிப்பிட்டு, தனது முந்தைய கருத்துக்காக மன்னிப்பும் கோரியிருந்தார் ஆண்ட்ரீசன்.
இந்நிலையில் ஆண்ட்ரீசன் கருத்து குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வெளியிட்டுள்ள பதிவில், ஆண்ட்ரசன் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
''இந்தியா குறித்து ஆண்டர்சன் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்க விரும்புகிறேன். ஆண்டர்சன் கருத்துகள் மிகவும் நோகச் செய்கிறது. அவை ஃபேஸ்புக்கின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை'', என மார்க் ஜூக்கர்பெர்க் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் உள்ள பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒரு வலுவான நாடாக உருவாகுவதற்கு இந்தியா எடுத்துள்ள முயற்சிகளால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார் மார்க்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.