

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. அதேநேரத்தில், தலைவர்கள் வழக்கு விசாரணையின் போது நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
"நேஷனல் ஹெரால்டு' வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை இன்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
அவர்களது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், காங்கிரஸ் தலைவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளித்து அனுமதி வழங்கியது. எனினும், விசாரணை நீதிமன்ற நீதிபதி அழைக்கும்பட்சத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஆனால், விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டனர்.
"நேஷனல் ஹெரால்டு' பத்திரிகைக்குச் சொந்தமான "அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தின் சொத்துகளை, "யங் இந்தியன்' என்ற நிறுவனத்தின் மூலமாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ், சாம் பிட்ரோடா, சுமன் துபே ஆகியோர் அபகரித்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தங்கள் மீதான புகாரையும், அழைப்பாணையும் ரத்து செய்யக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் சோனியா காந்தி உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் 7ஆம் தேதிநிராகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.