ஜவஹர்லால் நேரு பல்கலை. விவகாரம் குறித்து விவாதிக்க தயார்: மோடி

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஜவஹர்லால் நேரு பல்கலை. விவகாரம் குறித்து விவாதிக்க தயார்: மோடி
Updated on
1 min read

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கூட்டத்தை சமூகமாக நடத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிவசேனை, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் விவகாரம் முக்கியமாக எதிரொலித்தது.

கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், ஜவஹர்லால் நேரு பல்கைலக்கழக விவகாரத்தில், தேசநலனுக்கு எதிராக செயல்படும் மாணவர்களை காங்கிரஸ் ஆதரிப்பதாக பாஜக குற்றம்சாட்டுவது முற்றிலும் தவறானது. காங்கிரஸ் ஒருபோதும் அப்படி செயல்படாது. மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், அரசமைப்புச் சட்டம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக எதுவும் பேசாத நிலையில் அவர் மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தவறு. அவர்  தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றார்.

இதையடுத்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி,ஜேன்யு மாணவர்களின் செயல்பாடு ஆட்சேபத்துக்குரியது என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தில்லி ஜேஎன்யு மாணவர்கள் விவகாரம் உள்பட, எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இங்கு நிலவும் சுமுகமான சூழல், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் தொடரும் என்றார்.

அருணாசலப் பிரதேச மாநில அரசியல் நிலவரம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக தலித் மாணவர் தற்கொலை விவகாரம், சரக்கு-சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டுமென்று வலியுறுத்தினர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி, அனைத்து கட்சிக் கூட்டம், வரும் 22ஆம் தேதி நடைபெறும். அதில் ஜிஎஸ்டி மசோதா விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com