மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைங்கள்: பிரதமர் மோடி

நிலுவையில் உள்ள முக்கிய மசோதாக்களை நிறுவேற்றுவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என மாநிலங்களவையில் இன்று பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்
மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைங்கள்: பிரதமர் மோடி
Updated on
1 min read

நிலுவையில் உள்ள முக்கிய மசோதாக்களை நிறுவேற்றுவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என மாநிலங்களவையில் இன்று பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திருத்தம் வேண்டாம் என அரசு வேண்டுகோள் விடுத்தும், காங்கிரஸ் சார்பில் கொண்டுவரப்பட்ட திருத்த தீர்மானம் வெற்றி பெற்றது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான 300க்கும் அதிகமான திருத்தங்களை கொண்டு வருவதற்கு உறுப்பினர்கள் அளித்திருந்த மனுக்களை திரும்ப பெற்று அவையின் நீண்ட மரபை பாதுகாக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், பாரதீய ஜனதா ஆளும் ராஜஸ்தான் மற்று ஹரியானா மாநிலங்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயித்துள்ளதை எதிர்த்து கொண்டு வரப்பட்ட திருத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 94 வாக்குகளும், எதிராக 61 வாக்குகளும் பதிவாகின.

இதைத்தொடர்ந்து மோடி பேசியதாவது:

முன்னாள் பிரதமர் நேரு மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் ஒத்துழைப்பு அவசியம் என கூறியிருந்தார். நேருவின் எண்ணங்களின்படி, மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களும் நிறைவேறும் என நம்புகிறேன்.

தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் தனது உரையின்போது நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை அமளியின்றி நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமைக்குரியதாகும்

கடந்த கூட்டத் தொடரின் போது 42 மணி நேரம் வீணானது. 169 நட்சத்திர குறியிட்ட கேள்விகளில் 7 கேள்விகள் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதற்கு முந்தைய கூட்டத்தொடரின் போது 72 மணி நேரம் வீணானது.

ஆனால், தற்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிப்பதற்காக அமைச்சர்களும், அதிகாரிகளும் அதிக அளவில் தயாராகி வருகின்றனர். இதுதான் ஜனநாயகத்தின் பலம். இதற்கு நன்றி தெரிவிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.

பாஜக அரசின் குறைகளை நீங்கள் நுண்ணோக்கி (மைக்ரோஸ்கோப்) வைத்துப் பார்த்துக் கண்டு அறிகிறீர்கள். அதே, உங்கள் ஆட்சிக் காலத்தின்போது தொலைநோக்கி (பைனாகுலர்) வைத்துப் பார்த்தாவது செய்ய வேண்டிய பணிகளைச் செய்திருந்தால், என்னிடம் (மோடி) அந்தப் பொறுப்புகள் வந்திருக்காது.

மாநிலங்களவையில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. மக்கள் பிரதிநிதிகள் (மக்களவை எம்.பி.க்கள்) அவற்றுக்கு ஒப்புதல் அளித்தாலும், மாநிலப் பிரதிநிதிகள் (மாநிலங்களவை எம்.பி.க்கள்) அதை ஏற்றுக் கொள்வதில்லை.

மாநிலங்களவையில் என்ன நடந்தாலும், அது மக்களவையில் மட்டுமின்றி மாநில சட்டப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தாக்கத்தை உருவாக்கும். நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறித்த பண்டிதர் நேருவின் சிந்தனைகளுக்கும், கொள்கைகளுக்கும் மதிப்பளிப்பதுடன், நடப்பு கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றவும் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com