இஸ்லாமாபாத்: இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகளை வெளியேற்ற பாகிஸ்தான் தயாராகி வருவதாக, அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு வேலையில் ஈடுபட்டதாக கூறி மெஹ்மூத் என்ற பாகிஸ்தான் தூதரக அதிகாரி கடந்த வாரம் இந்தியாவில் இருந்து வெளியற்றப்பட்டார்.இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் சுர்ஜீத் என்ற இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது. அத்துடன் இந்தியாவில் பணியாற்றி வரும் தங்கள் நாட்டைச் சேர்ந்த நான்கு தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் திரும்ப அழைக்க உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரு அதிகாரிகள், இந்தியாவுக்கு உளவு வேளையில் ஈடுபட்டதாக கூறி அவர்களை வெளியேற்றும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது
இது தொடர்பாக பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள செய்தி விபரம் வருமாறு;
இந்திய தூதரகத்தில் வர்த்தக ஆலோசகராக பணியாற்றும் ராஜேஷ் குமார் அக்னிகோத்ரி மற்றும் ஊடக செய்தித்துறை முதன்மை செயலாளர் பல்பிர் சிங் ஆகிய இருவரும் இந்தியாவுக்காக உளவு வேளையில் ஈடுபட்ட பொழுது பிடிபட்டதாக தெரிகிறது. இவர்களில் ராஜேஷ் 'ரா' அமைப்பின் அலுவலர் என்றும். பல்பிர் 'ஐ.பி' அமைப்புக்காக்க பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது.
இவர்களிருவரும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சுர்ஜீத்துடன் சேர்ந்து, கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு ஜியோ தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது