மும்பை: புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வழங்குவதற்கு ஏற்ப நாடு முழுவதும் 47 ஆயிரம் ஏ.டி.எம்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந்தேதி இரவு அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய ரூ.2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளே தற்போது கிடைக்கிறது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்னும் புழக்கத்துக்கு வரவில்லை.
தற்போது உள்ள ஏ.டி.எம். எந்திரங்கள் புதிய ரூ.500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கையாளுவதற்கு ஏற்ப இல்லாததால், அவற்றை மாற்றி அமைக்கும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. நாள் தோறும் 12,500 ஏ.டி.எம். எந்திரங்களை மாற்றி அமைக்குமாறு மத்திய அரசு வங்கிகளுக்கு உத்தர விடப்பட்டு இருந்தது.
நாடு முழுவதும் மொத்தம் 2.2 லட்சம் ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. முக்கியமான 30 நகரங்களில் மட்டும் இந்த மாத இறுதிக்குள் அனைத்து ஏ.டி.எம். எந்திரங்களையும் மாற்றி அமைக்க வேண்டும் என்பதை இலக்காக மத்திய அரசு கொண்டுள்ளது.
ஆனால் இதுவரை நாடு முழுவதும் 47 ஆயிரம் ஏ.டி.எம். எந்திரங்கள் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மொத்தம் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் 25 சதவீதம் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.