புதுதில்லி: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து நாளை நாடாளுமன்றத் தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர்கள் ஆஷிஷ் கேதான் மற்றும் திலிப் பாண்டே ஆகிய இருவரும் தெரிவித்ததாவது:
மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரு முதலாளிகளுக்கு உதவும் பொருட்டு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை வெளிக்கொணர்வதற்காக அல்ல.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாளை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளோம். தில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா இந்த பேரணிக்கு தலைமை தாங்க உள்ளார்.
விரைவில் சில மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இந்த விவகாரம் முக்கிய பிரச்சினையாக இருக்கும்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் மீரட் , லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.