முகநூலில் சம்பாதிப்பதில் இந்தியர்கள் முதலிடம்!
கலிபோர்னியா: பிரபல சமூகவலைத்தளமான முகநூலின் 'மென்பொருள் குறைகளை கண்டறியும் திட்டத்தின்' கீழ், அதிக அளவில் பரிசு பணத்தை பெறுவதில், இந்த ஆண்டு இந்திய 'ஹேக்கர்கள்' முதலிடத்தில் உள்ளனர்.
பிரபல சமூக வலைத்தளமான முகநூல் தனது செயலியின் பாதுகாப்பில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டறிந்து களைவதற்காக, 2011-ஆம் ஆண்டு குறைகளை கண்டறியும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் முகநூலில் உள்ள இதர குறைகளும் கண்டறியப்பட்டு, அதை சுட்டிக்காட்டியவர்களுக்கு பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன. படிப்படியாக இந்த சேவைகள் முகநூலின் கிளை நிறுவனங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப்புக்கும் இது விரிவு செய்யயப்பட்டது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முகநூலில் உள்ள செயல்பாட்டு குறைபாடுகள் தொடர்பாக இந்த ஆண்டு இதுவரை 9000 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகளில் பங்கெடுத்த 149 பேருக்கு இதுவரை, ரூ.4 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் இந்தியர்கள் அதிக அளவில் பரிசுப்பணம் பெற்று முதலிடத்தில் உள்ளனர். இரண்டாமிடத்தில் அமெரிக்காவும், மூன்றாமிடத்தில் மெக்சிகோவும் உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.