புது தில்லி: உரி தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும், இந்திய எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மின்சார வேலியை தாண்டியது குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடந்து வரும் விசாரணையில், 4 பயங்கரவாதிகளில் ஒருவன், மின்சார வேலிகளின் இடுக்கில் நுழைந்து இந்திய எல்லைக்குள் வந்ததாகவும், பிறகு, அவர்கள் கொண்டு வந்த ஏணியைப் பயன்படுத்தி 3 பயங்கரவாதிகளும் மின்சார வேலியை தாண்டியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை சுமந்து கொண்டு நான்கு பேருமே முள் வேலியின் இடுக்கில் நுழைவது என்பது கடினம் என்பதால், ஒருவன் மட்டுமே இடுக்கில் நுழைந்து, ஏணியை பயன்படுத்தி மற்றவர்கள் எல்லையை தாண்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.