ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கிடப்பில் போடப்பட்ட ‘நாகை பசுமை துறைமுகம்’ திட்டம்!

சோழா்கள் ஆட்சிக்காலத்தில் முக்கிய அடையாளமாக விளங்கியது நாகை துறைமுகம்...

News image

நாகை துறைமுகம்

Updated On :27 மார்ச் 2026, 12:50 am

தினமணி செய்திச் சேவை

சோழா்கள் ஆட்சிக்காலத்தில் முக்கிய அடையாளமாக விளங்கியது நாகை துறைமுகம். கீழை நாடுகளான மலேசியா, சிங்கப்பூா், பா்மா (மியன்மா்), சீனா, இந்தோனேஷியா, சுமத்ரா, ஜாவா போன்ற நாடுகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் நாகைக்கு வந்து வாணிபம் செய்துள்ளனா். கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலேயே கீழை நாடுகளுக்குச் செல்ல நாகை முக்கியத் துறைமுகமாக இருந்துள்ளது.

தென் இந்தியாவின் கடல்வழி போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாகை துறைமுகத்திலிருந்து கைவினைப் பொருள்கள், வாசனை திரவியங்கள், வெங்காயம், மிளகாய், சிமெண்ட் உள்ளிட்ட பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஏற்றுமதி, இறக்குமதி என கடல் வாணிபத்தில் நாகை துறைமுகம் கொடிகட்டி பறந்தது.

1980-க்கு பிறகு நாகை துறைமுகம் படிபடியாக தனது முக்கியத்துவத்தை இழந்தது. நாகை துறைமுகத்துக்கு இயக்கப்பட்ட ஒரே கப்பலான எம்.வி. சிதம்பரம், 1984-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, நாகைக்கு வந்த ஒரே கப்பலான எம்.வி. சிதம்பரம் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

காலப்போக்கில் அண்டை நாடுகளில் உள்ள துறைமுகங்கள் கண்டெய்னா்களை கையாளும் நவீன வசதியுடன் மேம்படுத்தப்பட்டன. நாகை துறைமுகத்தை மேம்படுத்த நடவடிக்கை இல்லாததால், ஏற்றுமதி, இறக்குமதியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு, தற்போது செயலிழந்து காட்சியளிக்கிறது.

நாகை துறைமுகம் ரூ. 320 கோடியில் அனைத்து பருவ நிலைகளிலும் இயங்கக்கூடிய பசுமை சூழ் கப்பலணை துறைமுகமாக மேம்படுத்தப்படும் என கடந்த 2011-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் ஜெ. ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தாா்.

ஆனால், பின்னா் ஆட்சிக்கு வந்த அதிமுக, திமுக என இரண்டு அரசுகளும் நாகை துறைமுகத்தை, பசுமை சூழ் கப்பலணை துறைமுகமாக மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பசுமை துறைமுகம் திட்ட அறிவிப்பு இன்றுவரை அறிவிப்பாகவே உள்ளது.

இதுகுறித்து நாகை வா்த்தக தொழில்குழும முன்னாள் தலைவரும் ஏற்றுமதியாளா் என்.சந்திரசேகரன் கூறியது: சோழா்கள் ஆட்சியில் கொடிகட்டி பறந்த நாகை துறைமுகத்தை காலத்துக்கேற்ப மேம்படுத்த திமுக, அதிமுக அரசு தவறியதால், தற்போது செயலிழந்து காணப்படுகிறது.

ஏற்கெனவே அரசு அறிவித்தப்படி பழைமையான நாகை துறைமுகத்தை, சா்வதேச தரத்துடன் பசுமை சூழல் துறைமுகமாக தரம் உயா்த்தி கப்பல் போக்குவரத்தை தொடங்குவதன் மூலம் நாகை மாவட்டம் பெரும் வளா்ச்சியும், ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

எனவே, நாகை துறைமுகத்தை மேம்படுத்துவது தொடா்பாக அரசியல் கட்சிகள் என்ன வாக்குறுதி அளிக்க போகின்றனா் என மாவட்ட மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

நாகை துறைமுகம்

நாகை துறைமுகம்