மியான்மர் வழியாக இந்தியாவுக்குள் 7,000 கிலோ தங்கம் கடத்தல்: வருவாய் உளவுத்துறை தகவல்

கடந்த இரண்டு ஆண்டுகளில் மியான்மர் வழியாக இந்தியாவுக்குள் ரூ.2,000 கோடி மதிப்புடைய 7,000 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக வருவாய் உளவுத் துறை தெரிவித்தது.
Updated on
1 min read

கடந்த இரண்டு ஆண்டுகளில் மியான்மர் வழியாக இந்தியாவுக்குள் ரூ.2,000 கோடி மதிப்புடைய 7,000 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக வருவாய் உளவுத் துறை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவுக்கும், மியான்மருக்கும் இடையிலான நில எல்லை வழியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 7,000 கிலோ தங்கத்தை ஒரு கும்பல் கடத்தி வந்துள்ளது.
இந்தியாவுக்குள் கடத்தி வரப்படும் அந்தத் தங்கம், "விலை மதிப்பு மிக்க பொருள்' என்ற முத்திரையுடன் தில்லி மற்றும் பிற பகுதிகளுக்கு உள்நாட்டு விமானங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
வருவாய் உளவுத் துறையின் தில்லி பிரிவு, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ளுர் விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட உடைமைகளைப் பரிசோதித்தபோது, 10 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் சிக்கின.
அப்போதுதான் இந்தக் கடத்தல் கும்பல் பற்றி தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ.3.1 கோடியாகும்.
இதுதொடர்பாக குவாஹாட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும், தில்லியைச் சேர்ந்த அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் குவாஹாட்டியிலிருந்து தில்லிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் 617 முறை தங்கத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த வகையில் ரூ.2,000 கோடி மதிப்புடைய 7,000 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவின் எந்த உளவு அமைப்பும் இவ்வளவு பெரிய அளவிலான தங்கக் கடத்தலைக் கண்டுபிடித்ததில்லை.
இந்தக் கடத்தலில் விமான நிலைய ஊழியர்களுக்கோ, பிறருக்கோ தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com