சென்னை: சமீபத்தில் எஸ்.பி.ஐ வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள ஐந்து துணை வங்கிகளின் ஊழியர்களுக்கான புதிய நடத்தை விதிகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐயுடன் ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதரபாத், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் உள்ளிட்ட ஐந்து துணை வங்கிகள் சமீபத்தில் ஒன்றிணைக்கப்பட்டன.அப்படி இணைக்கப்பட்ட துணை வங்கிகளின் ஊழியர்களுக்கு புதிய நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஓய்வூதிய பலன்கள், ஊதிய விகிதம் மற்றும் பணி மூப்பு உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, 17 ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது எஸ்.பி.ஐயின் புதிய விதிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு எஸ்.பி.ஐக்கு நோட்டிஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.