ஹைதராபாத்: தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை 4 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தியுள்ளது தெலங்கானா அரசு. இதற்கு எதிப்பு தெரிவித்து பேரவையில் அமளியில் ஈடுபட்ட 5 பாஜக எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானாவில் கல்வி, வேலை வாய்ப்புகளில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முஸ்லீம்கள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதா தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தாக்கல் செய்தார்.
அந்த மசோதா பேரவையில் நிறைவேறியது. இதையடுத்து தெலங்கானா மாநிலத்தில் முஸ்லீம்கள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 4 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரித்துள்ளது.
முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ.,க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று போராட்டம் நடத்தினர். பழங்குடியினருக்கு 6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்து கூச்சல் எழுப்பினர்.
இந்நிலையில், அவையின் மையப்பகுதிக்கு சென்று கூச்சலிட்ட பாஜக எம்எல்ஏக்கள் 5 பேரும் பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இதுகுறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ., ஒருவர் கூறுகையில், தெலுங்கானா மாநில அரசு வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறார். உ.பி.,யில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியால், முதல்வர் பயத்தில் இருப்பதாக கூறினார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், இந்த இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற செயல் இந்தியாவில் "மினி பாகிஸ்தான்" உருவாக வழிவகுத்துவிடும் என்றார்.
வெங்கய்ய நாயுடுவின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ள முதல்வர் சந்திரசேகர் ராவ், மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. சமூகத்தில் பின்தங்கியவர்கள் முன்னேறுவதற்காகவே இந்த இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, யாரும் இதனை திரித்துக்கூற வேண்டாம் என்று தெரிவித்தார்.