ஜம்மு-காஷ்மீர் சோபூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், லஷ்கர் அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபூரில், ஒரு கட்டடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீஸார், துணை ராணுவப் படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் கூட்டு நடவடிக்கையாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, கட்டடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தினர்.
இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிசூடு நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் போலீஸார் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.