ஹைதராபாத்தில் ஞாயிற்றுக் கிழமை 20,000-திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட மாரத்தான் பந்தயத்தில் பெண் ஒருவர் புடவையில் முழு 42-கிமீ தூரத்தையும் ஓடி முடித்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
டிராக்ஸ், டி-ஷர்ட் அணிந்து ஓடியவர்களுக்கு மத்தியில் மெஜந்தா நிற புடவையில் உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருந்த ஜெயந்தி சம்பத் குமார் அனைவரது கண்களுக்கும் தனித்துவமாகத் தெரிந்துள்ளார். 44 வயதில் 42-கிமீ தூரத்தை புடவையில் ஓடி முடித்த இவருடன், பந்தயம் முடிந்ததும் பலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இது குறித்து ஜெயந்தி கூறுகையில் “இதில் பங்குபெற்றதை ஒரு சிறந்த அனுபவமாகக் கருதுகிறேன், நான் கைத்தறி பொருட்களின் விற்பனை மற்றும் பெண்களை ஊக்குவிப்பதற்காகவே இந்தப் போட்டியில் புடவையில் பங்குபெற வேண்டும் என முடிவு செய்தேன்” என்றார்.
இதன் மூலம், 44 வயதில் புடவையில் 42-கிமீ தூரத்தை ஐந்து மணி 15 நிமிடங்களில் கடந்து சாதனையையும் இவர் படைத்துள்ளார். இதை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்வதற்கும் ஜெயந்தி விண்ணப்பித்துள்ளார். இவரைப் போலவே நகரத்தைச் சேர்ந்த 27 வயதான உதய பாஸ்கர் என்பவரும் ஜெயந்திக்குத் துணையாக கைத்தறி தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் முழு பந்தய தூரத்தையும் வேட்டி அணிந்தவாறு கடந்துள்ளார்.