மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக மோசடி: மாயாவதி குற்றச்சாட்டு

தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக மோசடி செய்துள்ளதாக மாயாவதி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக மோசடி: மாயாவதி குற்றச்சாட்டு
Updated on
1 min read

உத்தரப்பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக மோசடி செய்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நடந்து முடிந்த உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில், ஆளும் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. 

இந்நிலையில், அங்கு புதிய திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று 2-ஆம் இடத்துக்கு முன்னேறியது. அலிகார் மற்றும் மீரட் ஆகிய 2 மாநகராட்சிகளையும் கைப்பற்றி அசத்தியது. 

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது எங்களுடன் தலித்துகள் மட்டும் இல்லாமல் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்கள், பொதுப்பிரிவினர் என்று அனைத்து பிரிவினர்களும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

நாங்கள் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்தபோது அது அனைவருக்குமான அரசாங்கமாகத்தான் இருந்தது. அதுவே இம்முறையும் எங்களுக்கு வெற்றியை அளித்துள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தது போன்று அமையவில்லை. 

இதற்கு முக்கிய காரணம் ஆளும் பாஜக தான். முன்னதாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் போன்று இம்முறையும் அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்துள்ளனர். 

இருந்தாலும் அவர்களின் இந்த முயற்சி எங்களிடம் எடுபடவில்லை. எங்களை முற்றிலும் வீழ்த்த முடியவில்லை. நாங்கள் 2-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளோம். பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்களும், தொண்டர்களும் கடுமையாகப் போராடி இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.

நான் பாஜக-வுக்கு ஒரு சவால் விடுகிறேன். அவர்கள் உண்மையானவர்கள் என்றால், ஜனநாயக்தின் மீது நம்பிக்கை இருப்பவர்களாக இருந்தால், வருகிற தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக பழைய ஓட்டுச் சீட்டு முறையை பின்பற்ற வேண்டும். 

உண்மையிலேயே தேசம் அவர்களின் பின்னால் இருக்கிறது என்று நம்பினால் அவர்கள் இதைச் செய்து காட்ட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்தால் எங்கும் வெற்றிபெற முடியாது என்பது பாஜக-வுக்கு நன்கு தெரியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com