இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், தனது சிறந்த ஃபீல்டிங்கிற்காக பெயர் பெற்றவர். இவர் ட்விட்டர் பக்கத்தில் தனது கணக்கை துவக்கி அதில் பதிவுகளிட்டு வருகிறார். இவரை பின்தொடர மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமும் உண்டு.
இந்நிலையில், மீண்டும் ஒருமுறை சைபர் புல்லியிங் எனப்படும் சமூக வலைதளத் தாக்குதலுக்கு கைஃப் ஆளாகியுள்ளார்.
இவர், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டார். இதற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது அவரின் இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரான செயல் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இருப்பினும் சில ரசிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதேபோன்று முன்பு யோகா செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டபோதும் இதுமாதிரியான எதிர்ப்புகள் அதிகளவில் வந்தன.
அதுமட்டுமல்லமால் இதுபோன்ற செயல்கள் மதத்தின் மாண்புக்கு எதிரானது என்று சில இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், யோகா என்பது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கலை என்று கைஃப் அதற்கு பதிலளித்தார்.