தேசத்தின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றுக்கு எதிராக பேசுபவர்களையும், மற்றவர்கள் மீது தங்களது கருத்துகளை திணிப்பவர்களையும் தவிர்த்து விடுங்கள் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
அண்மையில், ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் நடைபெற்ற ஜிஎஸ்டி விவாதக் கூட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்எல்ஏ தேவேந்திர ராணாவிடம் 'உன்னை இங்கேயே அடித்துக் கொல்வேன்' என்று அந்த மாநில அமைச்சர் இம்ரான் அன்சாரி தெரிவித்தார்.
இந்நிலையில், வெங்கய்ய நாயுடு கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பிரசார் பாரதி சார்பில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பாரதிய ஜன சங்கத்தை நிறுவியவரான சியாமா பிரசாத் முகர்ஜி, தேசத்தின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார். மேலும், ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்காக தனது உயிரையும் அவர் தியாகம் செய்தார்.
இதுபோன்ற தலைவர்களை நாம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேசத்தின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றுக்கு எதிராக பேசுபவர்களையும், தங்களுடைய கருத்துகளை மற்றவர்கள் மீது திணிப்பவர்களையும் நாம் தவிர்த்துவிட வேண்டும்.
நமது தேசத்தில் இருக்கும் அனைவருக்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கும் அரசியலமைப்புச் சட்டப்படி குறிப்பிட்ட வரையறை உள்ளது. மற்றவர்களின் மொழி, கலாசாரம், உணவு பழக்கம் ஆகியவை குறித்து கருத்து தெரிவிக்க இன்னொரு சாரருக்கு உரிமை கிடையாது.
மற்றவர்களை காயப்படுத்திவிட்டு நாம் மட்டுமே உயர்ந்தவர் என்று ஒருவர் கருதிவிடக் கூடாது என்றார் வெங்கய்ய நாயுடு.