புதுதில்லி: முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆய்வுக்கு தமிழகத்தை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கேரளா புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் நிறைய வழக்குகளை தொடர்ந்துள்ளன. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணைப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தங்களுக்குதான் தார்மீக உரிமை உண்டு எனவும், எனவே அதற்காக அணைப்பகுதியில் இணைப்பு சாலையான வல்லக்கடவு- முல்லைப்பெரியாறு சாலை வழியாக பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவின் இந்த மனுவுக்குத்தான் கேரளா உச்சநீதி மன்றத்தில் இடைமனு ஓன்றை தாக்கல் செய்துள்ளது. அதில்தான் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆய்வுக்கு தமிழகத்தை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
முல்லைப்பெரியாறு அணைப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு தார்மீக உரிமை கிடையாது. அணைப்பகுதியில் இணைப்பு சாலையான வல்லக்கடவு- முல்லைப்பெரியாறு சாலை சாதராணமான
பயன்பாட்டுக்காகவும், சிறிய இலகு ரக வாகனங்களை ஓட்டி செல்வது போலவும்தான் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் வழியாக கனரக பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது.
எனவே முல்லை பெரியாறு பகுதியில் தமிழகம் எந்தவிதமான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்று கேரளா தனது மனுவில் தெரிவித்துள்ளது