அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தியது இரண்டு குழுக்கள்: விசாரணையில் தகவல்

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது இரண்டு பயங்கரவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தியது இரண்டு குழுக்கள்: விசாரணையில் தகவல்


ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்ரீகர்கள் மீது இரண்டு பயங்கரவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 7 பேர் பலியாகினர். மேலும் 32 பேர் காயமடைந்தனர்.

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது இரண்டு பயங்கரவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியதாக மத்திய உள்விவகாரத் துறை அமைச்சகத்துக்கு காஷ்மீர் அரசு அனுப்பிய விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஒரு குழு பேருந்தின் முன்புறம் இருந்து தாக்குதல் நடத்தி ஓட்டுநரைக் கொல்ல முயன்றது. பேருந்தின் பக்கவாட்டில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில்தான் பேருந்தில் இருந்த 7 யாத்ரீகர்கள் பலியாகினர். 19 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலைத் தாண்டி பேருந்து ஓடிக் கொண்டிருந்த போது, கன்னபால் அருகே சும்ஜி ஆட்டோமொபைல் கடைக்கு பக்கத்தில் பேருந்தின் மீது மற்றொரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் முழு விவரம் : ஜம்மு- காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் இருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த மாதம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பக்தர்கள், அமர்நாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரை சென்றுவிட்டு, சோனாமார்க் எனுமிடத்தில் இருந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் ஒரு பேருந்தில் ஜம்முவுக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அனந்த்நாக்கில் கானாபால் எனுமிடத்தில் அந்தப் பேருந்து வந்தபோது பயங்கரவாதிகள் திடீரென அதன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில், 6 பெண்கள் உள்பட 7 யாத்ரீகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்தனர்.

முன்னதாக, காவல்துறையினர் வந்த கவச வாகனத்தின்மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு காவல்துறையினரும் துப்பாக்கியால் திருப்பிச் சுடவே, பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டனர். அதன்பிறகே, யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதனிடையே, அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றி வந்த பேருந்து ஓட்டுநர் விதிகளை மீறியுள்ளதாக காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதாவது, யாத்திரை செல்லும் வாகனங்கள் இரவு 7 மணிக்கு மேல் பக்தர்களை ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை பேருந்து ஓட்டுநர் மீறிவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2000- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய முதலாவது மிகப்பெரிய தாக்குதலாக இச்சம்பவம் கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com