/

தேசியக் கொடிக்கு அவமதிப்பு: மன்னிப்புக் கேட்ட பிரபல நடிகர்!

தேசியக் கொடிக்கு அவமரியாதை நிகழ்ந்ததாக எழுந்த சர்ச்சையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

News image
Updated On :24 ஜூலை 2017, 8:02 am

லண்டன்: தேசியக் கொடிக்கு அவமரியாதை நிகழ்ந்ததாக எழுந்த சர்ச்சையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்ஷய் குமார். இவர் 'கோல்ட்' என்ற படத்தின் படப்பிடிப்புக்காக தற்பொழுது இங்கிலாந்தில் உள்ளார். இந்திய ஹாக்கி அணி முதன்முதலாக வென்ற ஒலிம்பிக் தங்கப்பதக்கம் பற்றிய திரைப்படமாக 'கோல்ட்' உருவாகி வருகிறது.

இந்நிலையில் லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில், இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்  இறுதிப்போட்டியைக் காண அக்ஷய்குமார் வந்திருந்தார். அப்பொழுது இந்திய அணியினை உற்சாகப்படுத்தும் வகையில் கையில் தேசியக்கொடியை வைத்து அசைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றினை, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ஆனால் அந்த புகைப்படத்தில் அவர் தேசியக் கொடியை தலைகீழாக  பிடித்துக் கொண்டிருந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  அவர் தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்ததாகவும் குற்றசாட்டுகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து அந்தப் புகைப்படத்தினை அக்ஷய்குமார் உடனடியாக நீக்கி விட்டார். அத்துடன், 'தேசியக் கொடியை கையாளும் முறையை மீறி நடந்தமைக்கு என்னுடைய உண்மையான மன்னிப்பினைத்  தெரிவித்துக் கொள்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. அந்த புகைப்படம் நீக்கப்பட்டு விட்டது' என்றும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.