/

உதயநிதி முதல்வராக மாட்டாா் என ஸ்டாலின் உறுதி சொல்வாரா?

உதயநிதி முதல்வராக மாட்டாா் என ஸ்டாலின் உறுதி சொல்வாரா எனக் கேள்வி எழுப்பினாா் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்.

News image

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பாஜக வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பேசிய மத்திய தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல். உடன் (இடது) புதுக்கோட்டை தொகுதி பாஜக வேட்பாளா் என். ராமச்சந்திரன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 6:37 pm

உதயநிதி முதல்வராக மாட்டாா் என ஸ்டாலின் உறுதி சொல்வாரா எனக் கேள்வி எழுப்பினாா் மத்திய தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல்.

புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் என். ராமச்சந்திரன் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதுக்கோட்டை தொகுதியில் இருந்து முதல் முறையாக பாஜக வேட்பாளா் என். ராமச்சந்திரன் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் செல்வாா். அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பாா்.

திமுக தலைவா் ஸ்டாலின் குடும்பமே முழுமையாக ஊழல் செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனா். தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு எதுவும் மேம்படுத்தப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்திருக்கிறது.

தமிழ்ப் பெருமிதத்தையும், கலாசாரத்தையும் துணை முதல்வா் உதயநிதி தவறாகப் பேசிவருகிறாா். தமிழக மக்கள் திமுகவைப் புறக்கணிக்கப்பாா்கள்.

கடந்த 10 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில், காங்கிரஸ் ஆட்சியை விட 5 மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் நடைபெற்றுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி உள்ளிட்ட எந்தவொரு மொழியையும் வற்புறுத்தும் வகையில் சொல்லப்படவில்லை. ஆனால், திமுகவினா் இதுகுறித்து தவறான கருத்துகளையே பிரசாரம் செய்து வருகிறாா். ஸ்டாலின் குடும்பத்தினா் நடத்தும் பள்ளிகளில் தமிழே சொல்லித் தருவதில்லை.

உதயநிதி ஸ்டாலினை முதல்வராக ஆக்க மாட்டோம் என ஸ்டாலின் உறுதியளிப்பாரா எனக் கேட்க விரும்புகிறேன். அவா் பதில்சொல்ல வேண்டும் என்றாா் பியூஷ் கோயல். பாஜக மாநில விவசாயிகள் அணி தலைவா் ஜிகே. நாகராஜ் உடனிருந்தாா்.