புது தில்லி: முந்தைய காலக்கட்டத்தைக் காட்டிலும் தற்போது செய்தித்தாள் வாசிப்பதும், தொலைக்காட்சி பார்ப்பதும் பாதியாகக் குறைந்திருப்பதாக அசோச்செம் தெரிவித்துள்ளது.
தொழிற் அமைப்பான அசோச்செம் சுமார் 235 குடும்பங்களிடம் நடத்திய ஆய்வில், கடந்த 3 முதல் 4 ஆண்டுகளைக் காட்டிலும், தற்போது செய்தித்தாள் வாசிக்கவும், தொலைக்காட்சி பார்க்கவும் செலவிடும் நேரம் பாதியாகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்திய செய்தித்தாள் அச்சடிப்பு அளவில் எந்த தொய்வும் ஏற்படாமல் அதே உத்வேகத்துடன்தான் நடந்து வருவதாகவும், பல லட்சம் குடும்பங்கள் காலையில் தினசரிகளை வாங்குவதை கௌரவமாகக் கருதுவதும், குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து செய்தித் தாள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், புனே, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களைச் சேர்ந்த சில நூறு குடும்பங்களிடம் நடத்திய ஆய்வில், 80 சதவீதம் பேர், காலையில் பேப்பர் படித்துக் கொண்டே டீ குடிக்கும் தங்களது பழக்கத்தில் மெல்ல மெல்ல மாற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர்.
அதே சமயம், சமூக தளங்களின் வாயிலாக செய்திகளை அறிந்து கொள்வதும், இணையதளங்களில் செய்திகளை தேடிச் சென்று படிப்பதும் அதிகரித்து வருவதாகவும், சமூக தளங்களில் சில நேரங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வேகமாக பரவுவகதையும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதே போல, விளம்பரத் துறையிலும், தற்போது டிஜிட்டல் விளம்பரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், தங்களது விளம்பரம் எந்த வயதினரை சென்று சேர வேண்டும் என்பதை தேர்வு செய்து அந்த முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் செய்யும் விளம்பரங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதாகவும் அசோசெம் கூறுகிறது.