சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன்?: மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன்? என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன்?: மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன்? என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த மும்பை தடா நீதிமன்றம், அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் உறுதிசெய்தது. எனினும், அவருடைய தண்டனை 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
இதனிடையே, பிணையில் வெளியில் இருந்த சஞ்சய் தத், கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.புணேவில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். நன்னடத்தை காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சஞ்சய் தத் சிறையில் இருந்த காலத்தில், முதலில் 90 நாள்களும், பிறகு 30 நாள்களும் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு தொடர்ச்சியாக பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து, புணேவைச் சேர்ந்த பிரதீப் பாலேகர் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.எம்.சாவந்த், சாதனா ஜாதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
எந்த அடிப்படையில் சஞ்சய் தத்தின் நன்னடத்தை மதிப்பிடப்பட்டது? தண்டனைக் காலத்தில், பாதி நாள்களை அவர் வெளியே கழித்த நிலையில், அவருடைய நன்னடத்தையை மதிப்பிடுவதற்கு போதிய அவகாசம் கிடைத்தது எப்படி? சஞ்சய் தத்தின் கோரிக்கையை சிறைத்துறை டிஐஜி நேரடியாக ஆளுநருக்கு அனுப்பினாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பிறகு, சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலையானபோது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com