ஆளுநரின் சர்ச்சைக்குரிய ட்வீட்: கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்!

இந்து - முஸ்லீம் ஒற்றுமை குறித்த திரிபுரா மாநில ஆளுநரின் சர்ச்சைக்குரிய ட்வீட் காரணமாக, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று அங்குள்ள அரசியல் கட்சிகள்  கோரிக்கை வைத்துள்ளன.
ஆளுநரின் சர்ச்சைக்குரிய ட்வீட்: கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்!
Updated on
1 min read

அகர்தலா: இந்து - முஸ்லீம் ஒற்றுமை குறித்த திரிபுரா மாநில ஆளுநரின் சர்ச்சைக்குரிய ட்வீட் காரணமாக, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று அங்குள்ள அரசியல் கட்சிகள்  கோரிக்கை வைத்துள்ளன.

நாட்டின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் ஆளுநராக இருப்பவர் டத்கதா ராய். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்துவரும் இந்த மாநிலத்திற்கு 2015-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி முதல் இவர் ஆளுநராக  இருந்து வருகிறார்.   

இவர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை அமைப்பான 'பாரதிய ஜன சங்கத்தினை' தோற்றுவித்தவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, 1946-ஆம் வெளியிட்ட கருத்து ஒன்றினை தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

'சிவில் யுத்தம் ஒன்று நடக்காமல் இந்தியாவில் இந்து-முஸ்லீம் பிரச்சினை தீராது' என்பதே அந்த கருத்தாகும். அவரது இந்த ட்வீட் வெளியானவுடன் அவருக்கு எதிராக கண்டங்கள் குவியத் தொடங்கின.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளரான பிஜன் தார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, 'அபாயகரமான இந்த ட்வீட்டுக்கு பிறகு, ஆளுநர் போன்ற முக்கியமான பதவியிலிருந்து ராய் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அத்துடன் நீதிமன்றங்களும் அவர் மீது தாமாக முன்வந்து வழக்கு பதிய வேண்டும்' என்று தெரிவித்தார்.

இதே போல மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் தபாஸ் டே கூறும் பொழுது, 'ஆளுநர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த ஆளுநர் பதவியை விட , ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கையாளாகவே ராய் செயல்படுவ தாக  தெரிகிறது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே மறுநாள் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த ஆளுநர் ராய், 'சிவில் யுத்தம் தொடர்பான கருத்தை நான் மேற்கோள் காட்டினேன்; அது என்னுடைய கருத்தல்ல'; 'இது புரியாத முட்டாள்கள் என்னைக் கேலி செய்கிறார்க ள்;' என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இது போன்ற டிவிட்டர் சர்ச்சைகளில் ராய் சிக்குவது இது முதல் தடவை அல்ல. முன்னதாக ஜூலை 2015-ல், 'மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட அனைவரும் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது; அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும்' என்று டிவிட்டரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com