

புதுதில்லி: நமது ஒரே பாதுகாப்பாக அமைந்திருக்கின்ற நீதித்துறையினை அழிக்கவோ அல்லது பலவீனமாக்கவோ நினைக்காதீர்கள் என்று கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நீதிபதி சி.எஸ்.கர்ணன் தற்போது மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய நீதிபதி கர்ணன், ஊழல் குற்றச்சாட்டு பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இது குறித்த விவகாரத்தில் தானாக முன்வந்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதி கர்ணனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவுகள் பிறப்பித்தது. ஆனாலும் 2 முறையும் அவர் ஆஜராகாததால், உச்ச நீதிமன்றம் நீதிபதி கர்ணனை மார்ச் 31-ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு மேற்கு வங்க மாநில டி.ஜி.பிக்கு உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் நீதிபதி கர்ணன் கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர், ' என் மீது இன்று பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் தடை செய்யப்பட வேண்டும். கைது வாரண்ட் பிறப்பிக்க அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு தலித் சமூக நீதிபதியான நான் ஒரு பொது அலுவலகத்தில் என்னுடைய பணியை செய்ய விடாமல் தடுக்கப்படுகிறேன். இது அராஜகம்' என்று கருத்து கூறியிருந்தார். .
இந்நிலையில் நாட்டின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ராம்ஜெத்மலானி நீதிபதி கர்ணனுக்கு பகிரங்க கடிதம் ஓன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
"நீதிமன்றம் தொடர்பாக நீங்கள் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் திரும்ப பெறுங்கள். ஊழல் மலிந்துள்ள நமது நாட்டில்நீதிமன்றங்கள்தான் நமது ஒரே பாதுகாப்பு.அதனை அழிக்கவோ அல்லது பலவீனமாக்கவோ நினைக்காதீர்கள்.
ஒரு வழக்கறிஞராக என்னுடைய வாழ்க்கை முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உழைத்துள்ளேன். அவர்கள் மீது எனக்கு மிகுந்த அக்கறையும், அனுதாபமும் உள்ளது. ஆனால் உங்களுடைய செயல்கள் அவர்களுடைய நலனுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கி விடும்.
இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.