உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த 2007-இல் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதியளிக்க அந்த மாநில அரசு மறுத்து விட்டது.
கோரக்பூர் நகரில் கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற முகரம் ஊர்வலத்தின்போது முஸ்லிம் அமைப்பினருக்கும், ஹிந்து அமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்தக் கலவரத்தில் ஹிந்து இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக கோரக்பூர் தொகுதியின் அப்போதைய எம்.பி.யான யோகி ஆதித்யநாத் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர் மீதும், கோரக்பூர் எம்எல்ஏ ராதாமோகன் தாஸ் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு 10 நாள்கள் சிறையில் இருந்த ஆதித்யநாத் அதன் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில், ஆதித்யநாத்தை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி கோரி உத்தரப் பிரதேச காவல்துறை அம்மாநில உள்துறை அமைச்சகத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடிதம் எழுதியது. எனினும், இரண்டு ஆண்டு காலமாக அந்த அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
ஆதித்யநாத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இந்த அனுமதி அவசியமாகும். இந்திய தண்டனைச் சட்டம் 153-ஏ பிரிவின் கீழ் வரும் இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கோரக்பூர் கலவரம் தொடர்பாக சுதந்திரமான ஓர் அமைப்பின்
மூலம் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் பர்வேஸ் பர்வாஸ், ஆஸாத் ஹயாத் ஆகிய இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். அதன் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரப் பிரதேச மாநில அரசின் தலைமைச் செயலாளர் ராகுல் பட்நாகர் நேரில் ஆஜராகி, பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:
கோரக்பூர் கலவரம் தொடர்பாக யோகி ஆதித்யநாத்தை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி அளிக்க உத்தரப்பிரதேச அரசு மறுத்து விட்டது. இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய மாநில சிபி-சிஐடி காவல்துறை, இது தொடர்பான வழக்கை முடித்துக் கொள்ள அனுமதி கோரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளது என்று அந்தப் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது.
உத்தரப் பிரதேச அரசு சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் ராகவேந்திர சிங், "கோரக்பூர் கலவர வழக்கானது அரசியல் உள்நோக்கம் கொண்டது. கலவரம் நடைபெற்று 10 மாதங்களுக்குப் பிறகு அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆதித்யநாத்தை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி மறுத்த உத்தரப் பிரதேச அரசின் முடிவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்ய தாங்கள் முடிவு செய்துள்ளதாக மனுதாரர்கள் பர்வேஸ் பர்வாஸýம், ஆஸாத் ஹயாக்கும் தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளான ஜூலை 7-ஆம் தேதி அந்த மனுவை அவர்கள் தாக்கல் செய்ய அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ் சின்ஹாவும், உமேஷ் சந்திர ஸ்ரீவாஸ்தவாவும் அனுமதி அளித்தனர்.