ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகார வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் இருந்து முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும நிறுவனங்கள் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்குமாறு மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இதற்கு நான்கு வாராத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.