நேரடி மானியத் திட்டத்தின் மூலம் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி சேமிப்பு: அமித் ஷா
நேரடி மானியத் திட்டத்தின்மூலம், கடந்த 3 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி அரசால் சேமிக்கப்பட்டிருப்பதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.


நேரடி மானியத் திட்டத்தின்மூலம், கடந்த 3 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி அரசால் சேமிக்கப்பட்டிருப்பதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஆதார் இணைப்பு நேரடி மானியத் திட்டத்தால், தரகர் முறை, முறைகேடு உள்ளிட்டவைகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. நேரடி மானியத் திட்டத்தால், நாடு முழுவதும் 32 கோடி மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் நிதியுதவியைப் பெற்றுள்ளனர். இதன்மூலம், கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணம் ரூ.50 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசு கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. பாஜக அரசின் ஆட்சியின்கீழ் நாட்டில் நேரடி மற்றும் மறைமுக வரி 20 சதவீதம் அதிகரித்துள்ளது. சுதந்திர இந்தியாவில் இதுவொரு மிகப்பெரிய சாதனையாகும். இதேபோல், பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டோம் எனில், பாஜக தலைமையிலான அரசு சிறப்பாக பணியாற்றியுள்ளது.
இதனால், உலகிலேயே வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடாக இந்தியா தற்போது திகழ்கிறது. நாட்டில் பணவீக்கமும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
2016-17ஆம் நிதியாண்டில் யூரியா உற்பத்தி பலமடங்கு அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு இணைப்புகளும் அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளன.
நிலக்கரி, மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தியிலும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், ஊரக சாலைகள் அதிக தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளன.
வாகன தயாரிப்பும், மென்பொருள் ஏற்றுமதியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் இருந்தது. அன்னிய செலாவணி கையிருப்பும் அதிகமாக இருந்தது. இக்காலகட்டத்தில், பாஜகவும் அரசியல் ரீதியில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது.
மத்திய பாஜக கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமும், விவசாயத் துறை வளர்ச்சி 4 சதவீதமும் அதிகரித்துள்ளது. நேரடி அன்னிய முதலீடும் 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
தனிநபர் வருமானமும் ரூ.10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகியவைகளும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ், நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 2 கோடி பெண்களுக்கு எரிவாயு இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கையை 2019-ஆம் ஆண்டுக்குள் 5 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிதாக 13,500 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி 30 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், 23 கோடி எல்இடி விளக்குகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பதன்மூலம், மின் பயன்பாட்டின் அளவையும் குறைத்துள்ளது.
"ஸ்டாண்ட் அப் இந்தியா' திட்டத்தின்கீழ் ரூ.4,699 கோடி கடன் உதவிகளும், அடல் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் ரூ.1,344 கோடி தொகையும் அளிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காணும் வகையில், ஹூரியத் அமைப்புடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துமா? எனக் கேட்கிறீர்கள்.
அங்கு நடைபெற்றுவரும் கல்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவம் முடிவுக்கு வராதவரையில், மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடாது.
வன்முறை முடிவுக்கு வந்து, பேச்சுவார்த்தைக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டால், அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமித் ஷா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...