உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு நடத்தும் உறைவிடப் பள்ளியில், பிஸ்கட் சாப்பிட்ட சுமார் 100 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து, 55 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 45 பேரது நிலைமை கவலக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த மாநிலத்தின் பதோஹி நகரில் உள்ள தீனதயாள் உறைவிடப் பள்ளியில் புதன்கிழமை அளிக்கப்பட்ட பிஸ்கட்டை சாப்பிட்ட சுமார் 100 மாணவர்களுக்கு வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டது.
அதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் புதன்கிழமை இரவு அவசர அவசரமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த மாணவர்களில் 55 பேர் மருத்துமனையில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 45 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி முதல்வர் நீக்கம்: இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வரை பணியிடை நீக்கம் செய்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷாக் ஜி தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதுமட்டுமன்றி, இந்தச் சம்பவம் தொடர்பாக உறைவிடப் பள்ளிக்கு உணவுப் பொருள்களை விநியோகிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் குமார் குப்தாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விஷாக் தெரிவித்தார்.
தரமற்ற உணவுப் பொருள்கள் குறித்து கடந்த ஓர் ஆண்டாக புகார்கள் குவிந்தும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட சமூக நலத் துறை அதிகாரி மீதும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.