

இந்தியா, கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையேயான 14 நாள் கூட்டு ராணுவப் பயிற்சி, ஹிமாசலப் பிரதேசத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
இதுதொடர்பாக, ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
இந்தியா-கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சியின் தொடக்க விழா, ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள பக்லோ நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
"பிரபல் தோஸ்திக்-2017" என்ற பெயரில் 14 நாள்கள் நடைபெறும் இந்த கூட்டுப் பயிற்சியில், இந்திய ராணுவத்தின் கோர்க்கா ரைஃபிள் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்களும், இதற்கு இணையான கஜகஸ்தான் ராணுவப் பிரிவைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இரு நாடுகளைச் சேர்ந்த மூத்த ராணுவ அதிகாரிகள், கண்காணிப்பாளர்களாக இருந்து, வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளை மதிப்பீடு செய்கிறார்கள்.
இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்துவதற்காகவும், இரு நாட்டு ராணுவ வீரர்கள் தங்களது அனுபவங்களையும், திறமைகளையும் பகிர்ந்து கொள்வதற்காகவும், இந்த கூட்டுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும், பயங்கரவாத ஊடுருவலை முறியடிக்க வேண்டும் என்பதில் ஐ.நா. சபை தீவிரமாக உள்ளது. அதற்கேற்ப, இந்தப் பயிற்சியின்போது, இரு நாட்டு ராணுவ வீரர்களும் தங்களது செயல்பாடுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்கள். மேலும், தேவைப்படும் நேரத்தில், இரு நாட்டு ராணுவமும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இந்தப் பயிற்சியின்போது ஆராயப்படும் என்றார் அவர்.
இந்தியா-கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது கூட்டு ராணுவப் பயிற்சி இதுவாகும். இதற்கு முன்பு, கடந்த 2016-ஆம் ஆண்டு, கஜகஸ்தானில் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.