

சிபிஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதனை அவசர வழக்காகக் கருதி வரும் 13-ஆம் தேதியே விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சிபிஐ அமைப்பின் இரண்டாவது உயரிய பொறுப்பான சிறப்பு இயக்குநர் பதவிக்கு குஜராத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது நியமனத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. அதை சிபிஐ அமைப்பு விசாரித்து வருகிறது.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அஸ்தானாவின் நியமனம் சட்டவிரோதமானது என்றும், விதிகளுக்குப் புறம்பானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இதுதொடர்பான விசாரணை நிறைவடையும் வரை அவரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், 'அஸ்தானா நியமன சர்ச்சையை அவசர வழக்காகக் கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும்' என்றார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை வரும் 13-ஆம் தேதி விசாரணக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.