ஸ்ரீஜன் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு பிகார் மாநில அரசின் நிதியை முறைகேடாக ஒதுக்கியது தொடர்பான வழக்கில் 12 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக மொத்தம் 3 குற்றப்பத்திரிகை நகல்கள் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதீஷ் குமார் தலைமையிலான பிகார் அரசானது ஸ்ரீஜன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு ரூ. 1,000 கோடியை முறைகேடாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது அந்த மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் 3 குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. பாட்னா சிபிஐ நீதிமன்ற மாஜிஸ்திரேட் காயத்ரி குமாரி முன்பு அந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 12 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீஜன் அமைப்பின் தலைவர் மனோராமா தேவி (இவர் கடந்த பிப்ரவரியில் காலமாகிவிட்டார்), இயக்குநர் சரிதா ஜா உள்ளிட்டோரின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பரிசீலித்த மாஜிஸ்திரேட் காயத்ரி குமாரி, வழக்கை சிபிஐ சிறப்பு நீதிபதி அஜய் குமார் ஸ்ரீவஸ்தவாவின் அமர்வுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.