இரண்டாம் உலகப் போரின்போது, இந்தியப் பகுதிகளில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்களைத் தேடுவதற்காக, அந்நாட்டுக் குழுவினர் இந்தியா வந்துள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அவர்கள் இந்தியாவுக்கு வருவது, இது 5-ஆவது முறையாகும்.
இதுதொடர்பாக, கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இரண்டாம் உலகப் போரின்போது, சீன ராணுவத்துக்கு விமானம் மூலம் அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது. இமயமலை வழியாகப் பறந்த சில அமெரிக்க விமானங்கள், மாயமாகின. அவற்றை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதுபோன்ற விபத்துகளில் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த 400 வீரர்கள் மாயமாகிவிட்டனர்.
இந்நிலையில், விமான விபத்துகளில் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தேடும் பணியை அமெரிக்க பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த குழு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து, இதுவரை 4 முறை அந்தக் குழு இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தியாவில், வடகிழக்கு மாநிலங்களில் அந்தக் குழு தங்களது தேடுதல் பணியை மேற்கொண்டது.
முந்தைய பயணங்களின்போது, கைப்பற்றப்பட்ட உடல் பாகங்கள், மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
2015-ஆம் ஆண்டு கைப்பற்ற உடல் பாகங்கள், அமெரிக்க விமானப் படையின் அப்போதைய துணைத் தளபதி ராபர்ட் இ.ஆக்ஸ்போர்டு என்பவருடையது என சோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தற்போது வருகை தந்துள்ள அமெரிக்க குழு, முந்தைய பயணங்களின்போது செல்லாத பகுதிகளுக்குச் சென்று, 30 நாள்கள் தேடுதல் பணியை மேற்கொள்ளவுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் மேரிகே கார்ல்சன் கூறுகையில், ''இரண்டாம் உலகப் போரின்போது உயிரிழந்தவர்களின் உடல்களைத் தேடுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறது; இது, இந்தியா-அமெரிக்கா இடையே திருப்திகரமான அளவில் ஒத்துழைப்பு இருப்பதை வெளிப்படுத்துகிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.