குவாஹாத்தி: மணிப்பூர் மாநிலத்தில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.
மியான்மர் எல்லைக்கு அருகே உள்ள மணிப்பூர் மாநில சந்தல் மாவட்டத்தில் இன்று காலை அசாம் ரைபிள்ஸ் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இம்பால் நகரிலிருந்து 64 கி.மீட்டர் தொலைவில் உள்ள முகாம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்த படைவீரர்கள் இண்ட்ரா சிங் மற்றும் சோஹன் லான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள், மீட்புக் குழுவினரை அனுப்பி வைத்தனர். மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர்களும் அழைக்கப்பட்டுள்ளன.
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுவினர், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.