பிகார் மாநிலம், சமஸ்திபூரில் மருந்தாளுநர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.
பிகாரின் சமஸ்திபூர் மாவட்டத்திலுள்ள ஆஷாதி என்ற கிராமத்தில், மர்ம நபர்களால் மருந்தாளுநர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற போராட்டக்காரர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்துக்கும் தீவைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததார். மற்றொருவர், படுகாயமடைந்தார். இதுதொடர்பாக சமஸ்திபூர் காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் ரஞ்சன் கூறியதாவது: 8-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.
மேலும், காவல் நிலையத்துக்கும் தீ வைக்க முயன்றதால், போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்க முயன்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக குறிதவறியதில் இருவர் மீது குண்டுகள் பாய்ந்தன. அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட மற்றொருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தில், 3 போலீஸாரும், மாவட்ட அதிகாரி ஒருவரும் காயமடைந்தனர்.தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றார் அவர்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்கும்படி, காவல்துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.