ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே வீட்டுக் கூரை மேல் விமான ஜன்னல் ஒன்று விழுந்த காரணத்தால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைநதுள்ளனர்.
ஹைதராபாத்தின் வெளிப்புறப் பகுதியில் அமைந்துள்ள லாலாபெட் மாவட்டத்தில் உள்ளது யாதவ் பஸ்தி என்னும் பகுதி. இங்கு கணேஷ் யாதவ் என்பவரது வீட்டுக் கூரை மேல் நேற்று நண்பகல் 12 மணி அளவில் பெரிய சத்ததுடன் ஏதோ ஒரு பொருள் விழுவது போல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியில் வீட்டில் உள்ளவர்கள் வீட்டினை விட்டு வெளியே ஓடியுள்ளார்கள்.
பின்னர் மேலே சென்று பார்த்த பொழுதுதான் அது விமானம் ஒன்றின் ஜன்னல் என்பது தெரிய வந்துள்ளது. விழுந்த அதிர்ச்சியின் காரணமாக மாடியின் மேல் இருந்த சிமெண்ட் குடிநீர் தொட்டியில் மட்டும் லேசான விரிசல் விழுந்திருந்தது.
சம்பவம் அறிந்து அங்கு வந்து விசாரணை நடத்திய லலகுடா காவல் நிலைய கண்காணிப்பாளர் ராமு கூறியதாவது:
இந்த ஜன்னலானது தெலங்கானா மாநில விமானக் கழகத்திற்கு சொந்தமானது. டைமண்ட் DA 42 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் ஒன்றரை ஆண்டுகள் வயதானதாகும். ஆஸ்திரேலிய தயாரிப்பான இரட்டை எஞ்சின் கொண்ட கொண்ட இந்த விமானம் நான்கு இருக்கைகள் கொண்டதாகும். தற்பொழுது இந்த ஜன்னல் எங்களது பொறுப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கணேஷ் புகார் எதுவும் கொடுக்காததால் வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.