நோயாளிகளைக் காக்கும் தேவதூதர்களாக இருக்க வேண்டிய உத்தரப் பிரதேச மருத்துவத் துறை எமதூதர்களாக மாறியிருப்பதாக சிவசேனை விமர்சித்துள்ளது.
சரிவர செயலாற்றுவதற்காக மாநில அரசுக்கே ஆக்சிஜன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் மற்றும் ஃபரூக்காபாத் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது. குறிப்பாக, கடந்த சில நாள்களில் மட்டும் அந்த மருத்துவமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனையின் அதிகாரப்பூர்வ் நாளேடான
'சாம்னா'வில் செவ்வாய்க்கிழமை வெளியான தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க மருத்துவமனையொன்றில் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அப்போது மம்தா அரசை மிகக் கடுமையாக விமர்சித்தவர்கள்தான் தற்போது உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளுக்கு ஏழை - எளிய மக்களே அதிகம் வருகிறார்கள். அவர்களுக்குத் தரமான சிகிச்சையளிக்க வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு உள்ளது. நோயாளிகளைக் காக்க வேண்டிய தேவதூதர்களாக இருக்க வேண்டிய மருத்துவத் துறை உத்தரப் பிரதேசத்தில் எமதூதர்களாக மாறிவிட்டது.
மாநில சுகாதாரத் துறைக்கே ஆக்சிஜன் செலுத்தி உயிரூட்ட வேண்டிய நிலை உள்ளது. பின்னர் எப்படி அவர்கள் பிற நோயாளிகளுக்கு பிராண வாயு வழங்குவார்கள்? என்று அதில் கேள்வி
எழுப்பப்பட்டுள்ளது.