பள்ளி கழிப்பறையில் 2-ம் வகுப்பு மாணவர் கழுத்தறுத்து கொலை: சிபிஐ விசாரணைக்கு தந்தை கோரிக்கை

குர்கான் பள்ளி மாணவர் பிரதுமன் தாக்கூர் கொலைக்கான காரணத்தை சிபிஐ விசாரணை நடத்தி வெளிப்படுத்த வேண்டும் என
பள்ளி கழிப்பறையில் 2-ம் வகுப்பு மாணவர் கழுத்தறுத்து கொலை: சிபிஐ விசாரணைக்கு தந்தை கோரிக்கை
Updated on
1 min read

குருகிராம்: குர்கான் பள்ளி மாணவர் பிரதுமன் தாக்கூர் கொலைக்கான காரணத்தை சிபிஐ விசாரணை நடத்தி வெளிப்படுத்த வேண்டும் என மாணவனின் தந்தை வருண் தாக்கூர் கோரிக்கை வைத்துள்ளார்.

குருகிராமில் உள்ள ரயான் தனியார் சர்வதேச பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் பிரதுமன் தாக்கூர் (7) கழிப்பறையில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் கழுத்தறுத்து கொலை செய்து கிடப்பதாக சக மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிவித்ததையடுத்து, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பிரதும் தாக்கூரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், அந்தப் பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் உதவியாளர் அசோக் குமார் பிரதுமன் தாக்கூரிடம் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அசோக் குமாரை போலீஸார் கைது செய்தனர்.

மாணவனின் கொலை சம்பவத்தைக் கேள்விபட்டதும் ஏராளமான பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே கூடி பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலர் பள்ளி வளாகத்திற்குள் சென்று அலுவலகத்தை சூறையாடினர். பின்னர் போலீஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனிடையே, பிரதுமன் தாக்கூரின் தந்தை வருண் தாக்கூர், தனது மகன் சாவுக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் பிரதுமன் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் எனக்கு முதலில் தகவல் தெரிவிக்கவில்லை. பிரதுமன் தாக்கூரின் உடல் நிலை மோசமடைந்து உள்ளது என்றுதான் தெரிவித்தனர்.

உடனடியாக அவர்கள் பிரதுமனை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அவசர சிகிச்சை அளித்திருந்தால் அவன் உயிர் பிழைத்திருப்பான். ஆனால் பள்ளி நிர்வாகம் அப்படி செய்யவில்லை குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், தனது மகனின் கொலை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. கொலைக்கான முழு காரணங்களையும் வெளிக்கொண்டுவர வேண்டும். அதற்கு சிபிஐ விசாரணை செய்தால் தான் கொண்டுவர முடியும். எனவே, தனது மகனின் கொலைக்கான காரணத்தை சிபிஐ விசாரணை நடத்தி வெளிப்படுத்த வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும் வருண் தாக்கூர் கூறுகையில், "யாரும் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என அனைவரின் பெற்றோரிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் என் குழந்தையை இழந்துவிட்டேன்; அதற்காக பிறர் காயம் அடைவதற்கு நான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

மாணவனின் கொலை சம்பவத்தை அடுத்து பள்ளிக்கூடம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் பள்ளிக்கு அருகிலேயே மதுபான கடை ஒன்றை திறந்தனர். இச்சம்பவம் போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com